கோலகுபு பாரு, மே 06-
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் தனது வாகனத்தில் அரசியல் கட்சியின் கொடியுடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் புகைப்படத்தையும் காட்சிக்கு வைத்த குற்றத்திற்காக ஓர் இந்திய நபருக்கு உலு சிலாங்கூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஒரு மாத சிறைத் தண்டனை மற்றும் மூவாயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
66 வயது P. இராமசாமி என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சித்தி பாத்திமா தாலிப் ஒரு மாத சிறைத் தண்டனையையும் அபாரத்த் தொகையும் விதித்தார்.
பேரா, தஞ்சோங் ரம்புத்தானை பூர்வீகமாக கொண்ட இராமசாமி, தன்னுடைய விசுவாசத்தை புலப்படுத்தவதற்கு தனது மஸ்டா வாகனத்தை சுற்றியும் பக்காத்தான் ஹராப்பான் கொடிகளை பறக்கவிட்டதுடன் வாகனத்தின் மேலே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புகைப்படத்தையும், அப்படத்திற்கு மேலே மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் புகைப்படத்தையும் காட்சிக்கு வைத்துள்ளார்.
கோலகுபு பாரு இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறும் வேளையில் அத்தொகுதியில் உள்ள மாறுப்பட்ட வாக்காளர்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை தூண்டிவிடும் வகையில் இச்செயலில் இராமசாமி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இராமசாமி, இக்குற்றத்தை கடந்த மே 4 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.40 மணியளவில் கோலகுபு பாரு, தாமான் புக்கிட் பூங்கா என்ற இடத்தில் புரிந்ததாக குற்றச்சாட்டில தெரிவிக்கப்பட்டது.
வாக்காளர்கள், பக்காத்தான் ஹராப்பானுக்கே தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இச்செயலில் இராமசாமி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் வெள்ளி வதிக்க வகைசெய்யும் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ் இராமசாமி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கோலகுபு பாரு இடைத் தேர்தலை சிறக்க வைக்க வேண்டும், வாக்காளர்கள் மத்தியில் மனமகிழ்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஓர் ஆர்வத்தின் பேரில் மாமன்னரின் புகைப்படத்தை காட்சிக்கு வைத்து விட்டதாகவும் , அதற்குள் இவ்வளவு நுணுக்கமான சட்டங்களும் விஷயங்களும் இருக்கும் என்பது தமக்கு தெரியாது என்றும் இராமசாமி தனது கருணை மனுவில் தெரிவித்தார்.
முன்னதாக, குற்றம் புரிந்துள்ள இராமசாமிக்கு கடும்தண்டனையை அளிக்க வேண்டும் என்று பிராசிகியூஷன் அதிகாரி அஸ்மா சே வான் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
அரசியல் பிரச்சாரத்தின் போது மாமன்னரின் படத்தை பயன்படுத்தக்கூடாது, அச்செயல், அரச பரிபாலணத்தை அவமதிக்கும் செயல் என்ற சட்டம் தமக்கு தெரியாது என்று இராமசாமி கூறும் காரணத்தை நீதிமன்றம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அஸ்மா சே வான் வாதிட்டார்.








