நீலாய், மார்ச்.25-
நீலாய் மற்றும் பிற பகுதிகளில் உள்ள நினைவகப் பூங்காக்களில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் அஸ்திக் கலசத் திருட்டு சம்பவங்களில் போலீஸ் துறை தற்போது முக்கிய முன்னேற்றங்களை எட்டியுள்ளது.
திருடப்பட்ட கலசங்களில் 4 அஸ்திக் கலசங்களை நீலாய் போலீசார் மீட்டுள்ளனர். அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இதுவரை 10 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள் ஆட்களுக்குத் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
நீலாய் சியாவ் என் (Xiao En) நினைவகத்தில் 30 கலசங்களும், ஜோகூர் கூலாய் பெர்பெச்சுவல் (Perpetual) நினைவகத்தில் 22 கலசங்களும் திருடப்பட்டன. நிர்வாணா (Nirvana) மையத்திலும் திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.
சில குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், நிர்வாணா மையம் தனது கலசங்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
கூலாய் மற்றும் நீலாய் திருட்டுச் சம்பவங்களுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என்று ஜொஹாரி தெரிவித்தார்.








