பினாங்கு, மே 04-
பினாங்கு, பட்டர்வொர்த், ஜாலன் ராஜா உடா-வில் வெட்டுக்கத்தியை ஆயுதமாக தாங்கிய கும்பல் ஒன்று கார்களை அடித்து நொறுக்கி, கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் 28 பேரை கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட கும்பல், திரைப்படங்களில் வருவதைப் போன்று பாராங்கை ஏந்திக்கொண்டு கார்களை அடித்து நொறுக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இக்கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செபராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அஸ்ரி ஷாபி தெரிவித்துள்ளார்.
17 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 28 பேரும் இன்று அதிகாலையில் செபராங் பிறை உத்தாராவில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு கும்பல்களுக்கு இடையில் ஆத்திரமூட்டும் செயலினால் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி முகமது அஸ்ரி தெரிவித்துள்ளார்.








