கெமாமான், ஜூன் 14-
கெமாமான், பாயா பெரெஞ்சட் -டில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் விடப்பட்டிருந்த ஐந்து மாத பெண் குழந்தை ஒன்று இடது கை முறிந்து, தலையில் அடிப்பட்டு இரத்தம் கொட்டும் நிலையில் மீட்கப்பட்டது.
நேற்று காலை 11 மணியளவில் 29 வயது அந்த குழந்தையின் பராமரிப்பாளர் பாதிக்கப்பட்ட அக்கைக்குழந்தையின் தாயாரை தொடர்பு கொண்டு, குழந்தைக்கு கடுங்காய்ச்சலாக இருப்பதை கூறியதாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வீட்டில் அக்குழந்தை சுயநினைவின்றி கண்டறியப்பட்ட வேளை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக ஹன்யான் ரம்லான் கூறினார்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, பராமரிப்பாளரின் அலட்சிய போக்கினால் இச்செயல் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதாக ஹன்யான் ரம்லான் அறிவித்தார்.








