பல்லாயிரக்கணக்கான மக்கள் கையசைத்து, ஆட்சியாளருக்கு பிரியாவிடை தந்தனர்
மலேசியாவின் 66 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் மாமன்னர் ஒருவரின் 5 ஆண்டு கால ஆட்சியில் நான்கு பிரதமர்கள் சேவையாற்றிய மாபெரும் வரலாற்றுக்குறிப்புடன் நாட்டின் 16 ஆவது மாமன்னரான சுல்தான், Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah - வும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கன்டாரியாவும் தங்களின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இன்று ஜனவரி 30 ஆம் தேதி காலையில் அதிகாரப்பூர்வமாக விடைபெற்றனர்.
நாடாளுமன்றம் கட்டிடம் வீற்றிருக்கும் Jalan Parliment - லிருந்து Dato Onn சாலை வரையில் அதிகாலை 6 மணியளவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், வழிநெடுகிலும் காத்திருந்து, நாட்டின் அரியணையில் அமர்ந்து, 5 ஆண்டு கால ஆட்சியை முடித்து விட்டு, தஙகளின் சொந்த மாநிலமான பகாங்கிற்கு திரும்பும் மாமன்னர் தம்பதியருக்கு Daulat Tuanku….Daulat Tuanku….என வாழ்த்து கோஷம் எழுப்பி, பிரியாவிடை தந்தனர்.
மாமன்னர் தம்பதியரின் பிரியாவிடை ஊர்வலத்தில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு போலீஸ் துறை அனுமதி வழங்கிய நிலையில் பொதுக்கள்,தலைவர்கள், அதிகாரிகள், அரண்மனை பணியாளர்கள் என மக்கள் சாலையின் இரு மருங்குகளிலும் காலை 7 மணிக்கே குழுமத் தொடங்கிவிட்டனர்.
ஒரே வண்ணமயமாக நடைபெற்ற இந்த பிரியாவிடை நிகழ்வில் மாமன்னர் தம்பதியர் காரின் இரு பக்க கதவுகளின் கண்ணாடி இறக்கப்பட்டு, ர் மக்களை நோக்கி கையசைத்தவாறும் , புன்னகைத்தவாறும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
இவ்வழியனுப்பு விழாவில் மாமன்னர் தம்பதியர் மக்களிடமிருந்து விடைபெறும் வகையில் அவரின் அரச கார் மெதுவாக செல்வதற்கு ஏதுவாக கோலாலம்பூரில் 7 பிரதான சாலைகள் இன்று காலை முதல் அனைத்து போக்குவரத்திற்கும் மூடப்பட்டன.
மாமன்னர் தம்பதியர், பகாங், குவந்தானுக்கு செல்வதற்கு ஏதுவாக சிப்பாங், கோலாலபூர் அனைத்துலக விமான நிலையத்தில் Komplex Bunga Raya- வில் சிறப்பு விமானம் காத்திருந்தது.
மாமன்னர் தம்பதியர் விமானத்தில் ஏறும் வரையில் சுமார் 200 மீட்டர் தூரம் வரையில் அரச பாரம்பரிய நிகழ்வுகளுடன் சிறப்பு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்ட இருந்தது.
காலை 10.20 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் விமான நிலையத்தில் மாமன்னர் தம்பதியரை சிலாங்கூர் ராஜா மூடா,, தெங்கு அமிர் ஷா சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா வரவேற்றார்.
மாமன்னர் தம்பதியரை வழியனுப்பிவைக்கும் சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா, துணைப்பிரதமர்களான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபடிலா யூசோஃப் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.








