முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1MDB ஊழல் தொடர்பில் டிஏபி கொண்டிருக்கும் தனது நிலைப்பாட்டை கட்சி இன்னுமும் மறக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
நாட்டின் வளங்கள் பெரியளவில் சூறையாடப்பட்ட 1MDB ஊழலில் DAP எடுத்துள்ள தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், தெளிவாகவும் இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
1MDB ஊழலில் மிகப்பெரிய அளவில் பணம் வெளியேறியிருப்பதாக தெரிய வந்தப்பின்னரே 1MDB ஊழலுக்கு எதிராக DAP போர்க்கொடி தூக்கியதுடன், நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்ட அவ்விவகாரத்தில் நீதி கோரி, டாக்டர் மகாதீர் முகமதுவுடன் கைக்கோர்க்க வேண்டிய அவசியமும், நிர்ப்பந்தமும் DAP க்கு ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் தெரிவித்தார்.
1MDB ஊழலுக்கு வித்திட்ட நஜீப்பின் ஆட்சியை வீழ்த்துவதற்காக நோக்கமும், திட்டமும் இல்லாமல் இருந்து இருக்குமானால் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் கூட்டு சேர்வதற்கான அவசியமோ அல்லது நிர்பந்தமோ பக்காத்தான் ஹராப்பானுக்கு ஏற்பட்டு இருக்காது என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.








