கோலாலம்பூர், கெப்போங் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக வர்த்தகத் தளங்களில் நுழைந்து கொள்ளையடிப்பதை இலக்காக கொண்டிருந்த ரூபன் கும்பலைச் சேர்ந்த அறுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 13 ஆம் தேதிக்கும் 28 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கோலாலம்பூரில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூபன் கும்பலைச் சேர்ந்த 28 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அறுவர் பிடிபட்டனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை தலைவர் ஏசிபி டத்தோ ஹபிபி மஜின்ஜி தெரிவித்தார்.
ரூபன் கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட 14 குற்றப்பதிவுகளை கொண்டுள்ள 29 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏசிபி ஹபிபி குறிப்பிட்டார்.
பட்டறைகள், வாகன உபரிப்பாங்கள் விற்பனை கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிகாலை ஒரு மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அந்த வர்த்தகத் தளங்களில் நுழைந்து சம்பந்தப்பட்ட கும்பல் கொள்ளையிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ஹபிபி தெரிவித்தார்.








