கடந்த மே 31-ஆம் தேதி நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 31 வயதுடைய அப்துல் ரஹ்மான் ஷா மியா என்பவர் கொல்லப்பட்டதோடு, அவரது மனைவி 26 வயதுடைய போர்மின் லால் மியா கத்தியால் காயப்படுத்தப்பட்டார்.
பினாங்கு- தாமான் பெலிபிஸ், ஜாவியில் நடந்த இக்கொலை சம்பவம் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளதாகப் போலீசாரின் முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒஸ்மான் பாவ்டி அலம் என்பவர் இன்று ஜாவி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தண்டனைச் சட்டம் பிரிவு 302 மற்றும் பிரிவு 324 ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு, வழக்கு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, மலாய் மொழி புரியாததால் இவ்வழக்குடன் தொடர்புடைய மேலும் இரு ரோஹிங்கியா பெண்களுக்கு எதிரான குடிவரவுச் சட்டக் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை, மியான்மர் மொழிபெயர்ப்பாளர் முன்னிலையில் நடத்துவதற்காக வரும் ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








