கேமரன்மலை, ஜூன் 04-
கேமரன்மலை, திரிங்காப், காய்கறித் தோட்டத்தில் மூன்று தொழிலாளர்களக்கு இடையில் நிகழ்ந்த சண்டையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டது தொடர்பில் தலைமறைவாகி விட்டதாக நம்பப்படும் ஓர் இந்தோனேசிய ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒருவருக்கொருவர் நன்று அறிமுகமான அந்த மூன்று நபர்களுக்குள் கடந்த மே 30 ஆம் தேதி நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒரு நபர் கடும் காயங்களுக்கு ஆளானார்.
இச்சம்பவம் தொடர்பில் DENI என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் தேடி வருவதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
அந்த நபர், கேமரன்மலையை விட்டு தப்பிச் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் அந்த நபரின் புகைப்படம் வெளியிடப்படும்.
அந்த நபரின் கடப்பிதழை தன் வசம் கொண்டுள்ள காய்கறித் தோட்ட உரிமையாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








