சபா பெர்னாம் மாவட்டம் பாகான் நஹோடா ஒமார் மீனவக் கிராமத்தில் இன்று காலை நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்ற 6 வெளிநாட்டு மீனவர்கள் ஆற்றில் குதித்தனர்.
அவர்களில் சிலர் அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நீரில் மூழ்கியபடி பதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ், குடிநுழைவுத் துறை, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான எம்எம்இஏ மற்றும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் மொத்தம் 79 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிலாங்கூர் மாநில துணை போலீஸ் தலைவர் முகமது ஜைனி அபு ஹசான் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று பிற்பகல் தொடங்கிய இந்த சிறப்பு நடவடிக்கை கோல சிலாங்கூர் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாகவும், அங்கு 125 பேரின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகான் நஹோடா ஒமார் கடலோரப் பகுதிகள், மனிதக் கடத்தல் மற்றும் பல்வேறு எல்லைத் தாண்டிய குற்றச் செயல்களின் முக்கிய மையமாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








