தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் இருந்து மீன் தோல் எனத் தவறாக அறிக்கை செய்து கடத்த முயன்ற 5,069 கிலோகிராம் எடையுள்ள சுறா துடுப்புகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 8.36 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று மலாக்கா சுங்கத்துறை இயக்குநர் ரோஸ்லான் யூசோப் தெரிவித்தார்.
மலாக்கா சுங்கத்துறை அமலாக்கப் பிரிவு மற்றும் தலைமையகத்தின் போதைப்பொருள் பிரிவு ஆகியவை இணைந்து கிள்ளான் துறைமுகத்தில் உள்ள ஒரு கொள்கலனில் கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று இந்தச் சோதனையை மேற்கொண்டன. மீன் தோல் எனக் கூறப்பட்ட சரக்கு உண்மையில் சுறா துடுப்புகள் என்பதும், இதற்கு 10 சதவிகித வரி, மீன்வளத்துறை மற்றும் மாகிஸ் அனுமதிகள் தேவைப்படுவதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தச் கடத்தல் முயற்சிக்கு மூளையாகச் செயல்பட்ட சிலாங்கூரைச் சார்ந்த இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுங்கச் சட்டத்தின் 135(1)(a) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.








