டிஏபி இடம் மாறினாலும்,தடம் மாறவில்லை என்று அதன்மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஓர் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சியாக பரிணாமித்த டிஏபி, எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்து ஆளும் கட்சி அந்தஸ்துக்கு இடம் மாறினாலும், அதன் தடம் மாறவில்லை. இன்னமும் சரியான தடத்தில் பயணித்துக்கொண்டு இருப்பதை தம்மால் உணர முடிவதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
கோலகுபு பாரு இடைத்தேர்தலில் டிஏபி- யின் நடவடிக்கை அறையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்கந்தர் புத்ரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங், எதிர்கட்சியினர் நிலையிலிருந்து ஆளும் கட்சி நிலைக்கு இடம் மாறும் போது சில மாற்றங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
அந்த மாற்றத்தை எதிர்கொள்ளும் போது, கட்சியின் அணுகுமுறைகளில் சிலவேறுபாடுகளை காணலாம். ஆனால், அந்த வேறுபாடுகள், கட்சியின் தடத்தை தகர்த்தி விட்டதாக பொருள் கொள்ள முடியாது என்று லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் டிஏபி இடம் பெற்றது முதல் பல விவகாரங்களில் அக்கட்சி விட்டுக்கொடுக்கும போக்கை கடைப்பிடிக்கிறது என்ற கூறப்படுவது தொடர்பில் லிம் கிட் சியாங் பதில் அளித்தார்.








