தொழில்திறன் பயிற்சிக் கல்வியான டிவிஇடி 2.0 திட்டத்தின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், திறன் மேம்பாட்டு நிதிக் கழகமான பிடிபிகேவின் கீழ் செயல்படும் உயர் தாக்கத் திட்ட நிதியிலிருந்து அதிகபட்சமாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் தொழிலாளர் படை தயாராக இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்துறையின் உண்மையான தேவைகளுடன் டிவிஇடி கல்வி மற்றும் பயிற்சி மேம்பாட்டை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக பல்வேறு தரப்பினருக்கிடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிசெய்யும் வகையில், குறிப்பாக 'தேசிய டிவிஇடி கவுன்சில்' மூலமாக, முதலாளிகளும், தொழில் துறை சார்ந்தவர்களும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனையாகும் என்று புத்ராஜெயா சதுக்கத்தில் இன்று நடைபெற்ற டிவிஇடி 2.0 கொண்டாட்டத் தொடக்க விழா உரையில் அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தேசிய டிவிஇடி கவுன்சில் குழுவின் தலைவரான துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அகமது சாஹிட் ஹமிடியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
டிவிஇடி முதன்மையான தொழில் தேர்வு" என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த மூன்று நாள் நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
இதில் ஒன்பது முக்கியத் துறைகளைச் சேர்ந்த 107-க்கும் மேற்பட்ட முகமைகள், நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த அமைப்புகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.








