நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தை கொல்லைப்புற வழியாகக் கவிழ்க்க முயன்ற சதியில், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஜசெக இளையர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் உறுதிபட தெரிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சித் தலைவர் முகைதீன் யாசினிடமிருந்து கசிந்ததாகக் கூறப்படும் கடிதத்தை மேற்கோள் காட்டிப் பேசிய வூ கா லியோங், அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் துரோகமே நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படக் காரணம் என்று சாடினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறுவது உண்மைகளைத் திசைதிருப்பும் செயல் என்றும், அரசியல் நிலைத்தன்மையைக் குலைத்த உண்மையான சூத்திரதாரிகளை மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தண்டிக்க வேண்டும் என்றும் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரான வூ கா லியோங் வலியுறுத்தினார்.








