தைப்பிங், மே 24-
டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகைத் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்துவது மூலம் பொருட்களின் விலை உயரலாம் என்று மலேசியர்கள் பரவலாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
டீசல் எண்ணெய்யை பயன்படுத்தும் வர்த்தக வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் டீசலுக்கான உதவித் தொகை தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் வழங்கிய போதிலும், மக்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கு இந்த உத்தரவாதம் போதுமானதாக இல்லை என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
தன்னை ஷௌகி என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட 33 வயது வர்த்தகர் ஒருவர் கூறுகையில் டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகை அமல்படுத்தப்படுவது மூலம் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என்றார்.
தன்னுடைய வர்த்தக சகாக்களுடன் இது குறித்து கலந்து ஆலோசித்த போது, பொருட்களின் விலை உயரக்கூடிய சாத்தியத்தை அவர்கள் மறுக்கவில்லை என்று ஷௌகி குறிப்பிட்டார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தவுடனே பொருட்களின் விலை உயர்வு, இதனை நிரூபிப்பதாக உள்ளது அவர் சுட்டிக்காட்டினார்.
அந்நிய நாட்டவர்களுக்கும் உதவித் தொகை சென்றடைவதை தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை ஆதரிக்கிறோம். ஆனால், வாழ்க்கைச் செலவின உயர்வினால் உள்ளூர் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் சாத்தியம் இருரப்பதாக ஒரு காய்கறி வியாபாரியான 31 வயது அமிர் என்பவர் மலேசிய கினியிடம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான அடிப்படை பொருட்களை ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் டீசல் எண்ணெய்யை பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டுமே டீசலுக்கான உதவித் தொகை வழங்கப்படுமானால், அந்த உதவித் தொகை கிட்டாத போக்குவரத்துத்துறையில் ஈடுபட்டுள்ள இதர தரப்பினர், அதனை ஒரு சாக்காக பயன்படுத்தி, பொருட்களின் விலையை உயர்த்தும் சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்தார்.
நாட்டின் நலனை முன்னிறுத்தி அமல்படுத்துகின்ற இந்த திட்டத்திற்கும், கொள்கைக்கும் அரசாங்கம் சொந்த காரணங்களை கொண்டு இருக்கலாம். ஆனால், மக்கள் விரும்பாத கொள்கையை அரசாங்கம் மேற்கொள்ளாது என்று தாம் நம்புவதாக அவர் கூறுகிறார்.








