கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி பேரா, லுமூட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒன்று, மற்றொன்றுடன் மோதி, விழுந்து நொறுங்கி, பத்து வீரர்கள் உயிரிழந்த கோர விபத்து தொடர்பான முழு அறிக்கை நாளை வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
அந்த விபத்துக்கான முழு அறிக்கை நாளை வெளியிடப்படவிருப்பதாக தற்காப்பு அமைச்சர் கலீத் நோர்டின், இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் தெரிவித்து இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சரான ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார்.
லுமூட்டில் அரச மலேசிய கடற்படையின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்காக ஒத்திகையில் ஈடுபட்ட ஹெலிகாப்டர்களில் 7 பேர் பயணம் செய்த HOM-AW139 ரக ஹெலிகாப்டரும், மூவர் பயணம் செய்த Fennec ரக ஹெலிகாப்டரும் மிக நெருக்கமான சூழலில் மோதிக்கொண்டதில் கடற்படையைச் சேர்ந்த பத்து வீரர்களும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.








