மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பை மேலும் உள்ளடக்கியதாகவும், நிலையானதாகவும், இன்றைய தொழிலாளர் சந்தையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடியதாகவும் மாற்ற அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அனைத்துலக சமூகப் பாதுகாப்பு சங்கமான ஈசா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமதுவை மலேசியப் பிரதிநிதிகள் குழு மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது, இந்த விஷயம் தம்மால் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், தொழிலாளர்களின் நலனையும், நிறுவனங்களின் போட்டித்திறனையும் சமநிலைப்படுத்தும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன்மூலம் நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரமணன் தமது முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2025ஆம் ஆண்டிற்கான கிக் தொழிலாளர் சட்டம் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 16 லட்சத்திற்கும் அதிகமான கிக் தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் உறுதி செய்யப்படுவதாகவும் ரமணன் விவரித்துள்ளார்.
தொழில்துறையின் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் தொடர்ந்து புதிய கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








