36 மாதங்களுக்கு மேலாகப் புதுப்பிக்கப்படாமல் காலாவதியான வாகனமோட்டும் உரிமங்களைக் கொண்டிருப்பவர்கள், BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட RON95 பெட்ரோல் மானியத்தைப் பெறத் தகுதி பெறமாட்டார்கள் என்று சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ- வின் தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.
மானியம் பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதில் ஓட்டுநர் உரிமத்தின் நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் உரிமத்தை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு ஓட்டுநர் உரிமம் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 36 மாதங்களுக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே அது 'செயல்பாட்டில்' இருப்பதாகக் கருதப்படும். இக்காலகட்டத்திற்குள் இருப்பவர்கள் எவ்வித மறுதேர்வும் இன்றி உரிமத்தைப் புதுப்பிக்க முடியும் என்பதோடு, BUDI95 மானியத்திற்கும் தகுதி பெறுவர் என்று அவர் விளக்கினார்.
36 மாதங்களுக்கு மேல் காலாவதியான உரிமங்களை நேரடியாகப் புதுப்பிக்க முடியாது. அத்தகைய உரிமம் கொண்டவர்கள் மீண்டும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.








