ஈப்போ புந்தோங் பகுதியில் கைவிடப்பட்ட சுங்கை பாரி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்திய மாணவிகள் இருவரின் குடும்பத்தினர், இழப்பிலிருந்து மீண்டு வருவதாகவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அவசியமில்லை என்றும் பேராக் மாநில பெண்கள், குடும்பம், சமூக நலன், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுக் குழுவின் தலைவர் டத்தோ சல்பியா முகமது தெரிவித்துள்ளார்.
அச்சம்பவத்துக்குப் பிறகு சமூக நலத் துறை அதிகாரிகள், அக்குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும், துயரத்தில் இருந்தாலும் அவர்கள் தற்போது நிலையான மனநிலையில் இருப்பதாகவும் சல்பியா முகமது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் குடும்ப வன்முறையுடன் தொடர்புடையதா? என்ற கேள்விக்கு, விசாரணை நடைபெற்று வருவதால் அது பற்றி கருத்துத் தெரிவிக்க இயலாது என்றும் சல்பியா முகமது தெரிவித்துள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க சமூக விழிப்புணர்வை அதிகரிக்கவும், சிரமத்தில் உள்ள குடும்பங்கள் அல்லது நபர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக பள்ளி பகடிவதை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிறப்பு குழு அமைப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாகவும் சல்பியா தெரிவித்துள்ளார்.








