இன்று பிற்பகல் 2 மணியளவில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூர் மாநகரில் மிக பரபரப்பான சாலையான ஜாலான் சுல்தான் இஸ்மாயில்- பகுதியில் கான்கார்ட் ஹோட்டல் முன்புறம் ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்த சம்பவத்தில் காரோட்டி ஒருவர் உயிரிழந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் அந்த காரோட்டியுடன் பயணம் செய்த ஒரு நபரும், இ-ஹைலிங் காரில் பயணம் செய்த சுவிசர்லாந்து நாட்டைச் சேர்ந்த 72 வயது மாதுவும், இ-ஹைலிங் வாகன ஓட்டுநரும் கடும் காயங்களுக்கு ஆளாகி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரத்தின் பெரிய கிளை காரின் மீது விழுந்ததில் 47 வயது காரோட்டி, சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவருடன் காரில் பயணம் செய்த 26 வயது நபர், கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை பொது தற்காப்புப்படையின் உதவியுடன் தீயணைப்பு, மீட்பு படையைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட வீரர்கள், மரக்கிளைகளை அகற்றி, மீட்பு நடவடிக்கையில் துரித வேகத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 17 வாகனங்கள் சேதமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.








