மலேசியாவில் சமூக வலைதள நேரலைகளான நேரலை ஒளிபரப்பு மூலம் பொதுமக்களின் இரக்கத்தைப் பயன்படுத்தி, 'நவீன பிச்சைக்காரர்கள்' என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோர் முறைகேடாகக் கோடி கணக்கில் பணம் குவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போர் பாதிப்புகள், ஏழை எளியோருக்கான உதவி மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் உணர்ச்சிகரமான கதைகளைக் கூறி இந்த மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக, டிக்டாக் போன்ற செயலிகளில் தனிநபர்களும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளின் QR குறியீடுகளைப் பயன்படுத்தி நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான ரிங்கிட்களைச் வசூலிக்கின்றனர்.
வசூலிக்கப்படும் மொத்தத் தொகை எவ்வளவு அல்லது அது யாருக்குச் சென்றது என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படுவதில்லை.
பிரபல மதப் போதகர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் செய்து, போலி நன்கொடை விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன.
நிறுவனங்களின் பெயரில் QR குறியீடுகளைக் காண்பித்தாலும், அவை தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM , தற்போது பாலஸ்தீன நிதி உட்பட பொதுமக்களிடம் நிதி திரட்டிய ஐந்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க 'தொண்டு நிறுவனங்கள் சட்டம்' உள்ளிட்ட மூன்று புதிய சட்டங்களைக் கொண்டுவர SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி பரிந்துரைத்துள்ளார்.
மலேசிய பயனீட்டாளர் சங்கத்தின் துணைத் தலைவர் அஸ்லின் ஒத்மான் கூறுகையில், "பொதுமக்கள் தங்கள் நற்பண்பால் ஏமாற்றப்படுகிறார்கள். செல்வாக்கு மிக்க சமூக வலைதளப் பிரபலங்களின் நிதித் திரட்டல்களை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.








