கோலாலம்பூர், கெப்போங், டெசா பார்க் சிட்டி-யில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்த குடும்ப சோகத்துக்குப் பின்னால், 2 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் லவ் ஸ்கேம் மோசடி நடத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
48 வயதுடைய கணவர், உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு குடியிருப்பின் உணவு மேசையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாதில் மார்சூஸ் கூறினார்.
அந்தக் கடிதத்தில், 47 வயதுடைய தனது மனைவி லவ் ஸ்கேம்- மில் சிக்கி, காதல் மோசடிக்காரருடன் தொடர்பில் இருந்ததால், தமக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் இழப்பும் கடனும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனைவி தொடர்ந்து அந்த மோசடிக்காரரைத் தொடர்புகொள்ள முயன்றதாகவும், இது தனது பிள்ளைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என அவர் கருதியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மனைவி மற்றும் ஒன்பது வயது மகன், ஏழு வயது மகளை கொல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி மற்றும் கையுறைகள் வீட்டின் முதன்மை படுக்கையறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூன்று பேரின் மரணத்திற்குப் பின்னர், அந்த ஆண் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
ஒன்பது வயது சிறுவனின் கழுத்தில் 5 செண்டிமீட்டர் ஆழமான கத்திக்குத்துக் காயம் இருந்தது உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மற்றவர்களின் உடற்கூறு பரிசோதனை இன்னும் முடிவடையவில்லை என்று டத்தோ ஃபாதில் மார்சூஸ் கூறினார்.








