உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், மலேசியாவிற்கான மருத்துவப் பொருட்கள் விநியோகத்தில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக, பொது சுகாதாரத்தை பாதுகாப்பது தொடர்பாக, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களின் இருப்பு விநியோகம் மற்றும் விலை உயர்வு தொடர்பான சவால்களை, சுகாதார அமைச்சு நெருக்கமாக கண்காணிக்கும் என்றும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.
அதேவேளையில், சிறு விவசாயிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை இலக்காகக் கொண்டு அரசாங்கம் அளித்து வரும் உதவிகள் அனைத்தும் தொடர்ந்து வழங்கப்படுவதை அமைச்சு கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், சவால்கள் பல வந்தாலும், மடானி அரசாங்கம் தொடர்ந்து கடினமாக உழைத்து, கருணையுடன் செயல்பட்டு, மக்களின் நலனையே நாட்டின் முன்னுரிமையாகக் கருதும் என அன்வார் இன்று திங்கள்கிழமை தமது சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகள் இருந்த போதிலும், புடி அக்ரி-காமோடிட்டி திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








