நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கு, பாரிசான் நேஷனல் தமது ஆதரவை திரும்பப் பெற்றுள்ள நிலையில், புதிய ஆட்சிக்கான மக்களின் தீர்ப்பை பெற, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் புதிய மாநில ஆட்சியைத் தீர்மானிக்கும் வாய்ப்பினை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாரிசான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன் தலைமையிலான மாநில அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, அந்தோனி லோக்-இன் இந்தப் பரிந்துரையானது எழுந்துள்ளது.
இதன் காரணமாகத் தற்போது, நெகிரி செம்பிலானில் ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே, கடந்த மே 17-ஆம் தேதி, ஜொகூரில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டிலும், ஜோகூர் சட்டமன்றம் மற்றும் நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் கலைக்க வேண்டும் என்ற முன்மொழிவை தாம் முன்வைத்ததாகவும் அந்தோனி லோக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெகிரி செம்பிலான் ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்தால், புதிய மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பக்காத்தான் கூட்டணி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








