சபா மாநிலம் துவாரான் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் உள்ளூர் சந்தையில் விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த 11,450 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பொதிகளை கடற்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கெத்தும் தூளின் சந்தை மதிப்பு 11 லட்சத்து 45 ஆயிரம் ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாவில் கெத்தும் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பறிமுதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 6 மணியளவில் சபா கடற்படை போலீசாரும் துவாரான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து நடத்திய சோதனையில் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக 23 முதல் 46 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் 28 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என சபா படைப் பிரிவு கடற்படை போலீஸ் தளபதி உதவி ஆணையர் அஹ்மத் அம்ரி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இச்சோதனையின் போது வளாகம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியையும் போலீசார் பரிசோதித்ததாகவும், அப்போது கெத்தும் தூள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு 1952-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் சட்டத்தின் 30(3)-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்ற கும்பல் உறுப்பினர்களை அடையாளம் காணும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








