கோலாலம்பூர், மே 08-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சொகுசு கார்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாட்டு பிரஜைகளை ஈர்க்கும் சில வாகன ஓட்டுநர்களின் செயல்பாடு அம்பலமானது.
KLIA 1, KLIA 2 ஆகிய இரண்டு விமான நிலையங்களிலும் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட Op Khas Ulat, e-Hailing திடீர் சோதனையின் போது 10 நபர்களை சாலை போக்குவரத்து துறை கைது செய்துள்ளது.
இச்சோதனையில் 20க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன் 10 விதமான சொகுசு கார்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக சாலை போக்குவரத்து துறையின் துணை இயக்குநர் ஏடி ஃபெட்லி ரம்லி தெரிவித்தார்.
மலேசியாவிற்கு முதன்முறையாக வருகைப் புரியும் அந்நிய சுற்றுலாப்பயணிகளை மலிவான விலையில் அழைத்து செல்வதாக உறுதியளித்து, பிறகு காரில் அப்பிரஜைகள் ஏறியப்பின் பல்வேறு காரணங்களை கூறி பயணிக்கும் விலையை அதிகரிப்பதாக ஏடி ஃபெட்லி குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இன்று அதிகாலை வரையில் மேற்கொண்ட Op Khas e-Hailing சோதனையின் போது மொத்தம் 312 பேர் உட்பட 2,168 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.








