வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தரில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றுவதற்கு ஒரு தொடக்கமாக அமையலாம் என்று அதன் சிலாங்கூர் மாநில தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப் பெற்றால் அது சிலாங்கூர் மாநில அரசை மாற்றி அமைத்து விடாது. ஆனால், பக்காத்தான் ஹராப்பானின் சிலாங்கூர் மாநில அரசை வீழ்த்தி, அந்த மாநிலத்தை கைப்பற்றுவதற்கு நெருங்கி விட்டோம் என்பதற்கு ஒரு தொடக்கமாக மற்றும் சமிக்ஞையாக அமையும் என்று அஸ்மின் அலி குறிப்பிட்டார்.
கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் கைருல் அஸ்ஹரி சௌத்யை ஆதரித்து, அக்கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று கோலகுபு பாருவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உரையாற்றுகையில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரான அஸ்மின் அலி இதனை தெரிவித்தார்.
தவிர கோலகுபு பாருவில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றியானது, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








