வர்த்தகர் நிக்கி லியாவ் (Nicky Liow) மீதான 26 பணமோசடி வழக்குகள் வாபஸ் பெறப்படுவதற்கு முன்பு, அவர் 2023-ஆம் ஆண்டில் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தி விட்டதாக சட்டத்துறை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
நிக்கி லியாவின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி, 10 மில்லியன் ரிங்கிட் அபராதத்துடன், அவரது 6 லட்சத்து 47 ஆயிரத்து 366 ரிங்கிட் மதிப்புள்ள பிணைத் தொகை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களும் அரசாங்கத்தால் முடக்கப்பட்டன. அபராதம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2023 ஜூன் 15 அன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்தது.
மிகப் பெரிய பண மோசடியில் சிக்கிய வர்த்தகர் நிக்கி லியாவ் அரசியல்வாதிகளின் செல்வாக்கினால் விடுவிக்கப்பட்டார் என்று சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பொதுமக்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள சட்டத்துறை அலுவலகம், முறையான சட்ட நடைமுறைகளின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், எவ்வித வெளி அழுத்தங்களுக்கும் ஆளாகாமல், ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த தன்னிச்சையான அதிகாரம் பயன்படுத்தப்பட்டது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.








