பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 29-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நடப்பு அரசாங்கத்திலிருந்து இந்திய சமூகத்திற்கு வெளிப்படையாக எந்தவொரு பலனும் இல்லாவிட்டாலும் பிரதமர் அன்வார் மற்றும் DAP- கட்சி மீது இந்திய சமூகம் தொடர்ந்து விசுவாசமாக இருந்து வருவது ஏன் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜெய்த் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.
நடப்பு அரசாங்கத்தில் இந்திய சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதுடன் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கல்வி இட வாய்ப்புகள் போன்றவற்றில் நியாயமாக கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் வழங்கப்படாத நிலையில் இந்திய சமூகம் தொடர்ந்து பிரதமர் அன்வார் மீது விசுவாசம் செலுத்தி வருவது தமக்கு புரியவில்லை என்று முன்னாள் கோத்தா பாரு எம்.பி.யான ஜெய்த் இப்ராஹிம் வினவினார்.
நாட்டின் தேசிய நீரோடையிலிருந்து ஓரங்கப்பட்ட ஒரு சமூகமாக, போதுமான வருமானமின்றி ஓர் ஏழை சமூகமாக இந்தியர்கள் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்த போது இந்தியர்கள் அதிக மரியாதையுடன் நடத்தப்பட்ட ஒரு சமூகமாக பார்க்கப்பட்டது என்று ஜெய்த் இப்ராஹிம் நினைவுகூர்ந்தார்.
கடநத் 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானினால் பாரிசான் நேஷனல் தோற்கடிக்கப்படும் வரையில் இந்திய சமுகத்தின் மேன்மைக்காக அவர்களுடன் இணைந்து நஜீப் கூட்டாக வழங்கிய பல நன்மைகளை கோலகுபு பாருவில் உள்ள 12 ஆயிரம் இந்திய வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஜெய்த் இப்ராஹிம் கேட்டுககொண்டார்.
குறிப்பாக, இந்திய சமுதாயத்தின் சமூகவியல், பொருளாதார உயர்வுக்காக பத்து ஆண்டுகள் அடிப்படையில் நஜீப் அறிமுகப்படுத்திய புளுபிரிண்ட் ( Blue Print ) திட்டத்தை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அந்த வகையில் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு இடைத்தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளும் தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்கள், ஒன்றுப்பட்ட நிலையில் நஜீப்பை விடுதலை செய்யுமாறு கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்று இன்று தனது X பதிவில் ஜெய்த் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.








