பெட்டாலிங் ஜெயா, ஜூன் 06-
நாட்டில் கடும் வறிய நிலையில் உள்ளவர்களை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் வறுமை குறியீட்டு அளவை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டுமென பொருளாதார நிபுணர் பெனடிக்ட் வீரசேன வலியுறுத்தியுள்ளார்.
பகாங்-ங்கில் மக்களின் கடும் வறிய நிலையை, மாநில அரசாங்கம் வெற்றிகரமாக துடைத்தொழித்திருப்பதாக, பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மெயில் அண்மையில் கூறியிருந்ததை மேற்கோள்காட்டி அவர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம், கடும் வறிய நிலைக்கான வரையறையைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நடப்பு சூழலில், கடும் வறிய நிலை வெற்றிகரமாக துடைத்தொழிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறிவருவது, உண்மையான சூழலை எடுத்துரைக்கவில்லை.
கடந்த காலங்களைப் போன்றே, தற்போது உள்ள வறுமைக்கோட்டிக்கான அளவீட்டு முறை மிக குறைவாக உள்ளது. மக்களின் வாழ்க்கை செலவினங்களை அது முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
சம்பளத்தை அடைப்படையாக கொண்டு கடும் வறுமை நிலையை கண்டறிவதற்கு பதிலாக, பல பரிமாணங்களை உட்படுத்திய வறுமைக் குறியீட்டு முறையை அரசாங்கம் பயன்படுத்துவதே ஏற்புடையதாக இருக்குமெனவும் பெனடிக்ட் வீரசேன கூறினார்.








