Jul 11, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரப்படி 26.43 சதவிகித வாக்குகள் பதிவு
அரசியல்

ஜோகூரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரப்படி 26.43 சதவிகித வாக்குகள் பதிவு

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

ஜோகூர் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 26.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது வரை அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளாக 34.4 சதவிகிதத்துடன் Tanjung Surat, 33.6 சதவிகிதத்துடன் Rengit, 33.2 சதவிகிதத்துடன் Semarang ஆகியவை முன்னிலையில் உள்ளன.

அதேவேளை, 21.9 சதவிகிதத்துடன் மஹாராணி, 19.9 சதவிகிதத்துடன் Bentayan மற்றும் 19.6 சதவிகிதத்துடன் Penggaram ஆகிய தொகுதிகளில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜோகூர் மாநிலத் தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி 21.33 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் பிரசாரக் காலத்தில் மக்களிடம் காணப்பட்ட ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.

கடந்த 2022 ஜொகூர் மாநிலத் தேர்தலில், 54.9 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது.

இது அண்மைக்கால மாநிலத் தேர்தல்களில் மிகவும் குறைவான வாக்குப்பதிவாகும்.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் 27.3 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி, ஜோகூர் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2022 மாநிலத் தேர்தலில், 56 தொகுதிகளில் 40 இடங்களில் வெற்றி பெற்ற பாரிசான் நேஷனல் ஜொகூர் மாநில அரசாங்கத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தேர்தலில் ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல், மூடா, பெர்சாமா மற்றும் பிஎஸ்எம் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

குறிப்பாக, பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையே பெரும்பாலான தொகுதிகளில் நேரடி போட்டி நிலவுவதால், இந்தத் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாகக் கருதப்படுகிறது.

ஜோகூர் மாநிலத்தின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் கூட்டணியைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தல், மலேசியாவின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் முக்கியமான தேர்தலாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

Related News