ஜோகூர் பாரு, ஜூலை.11-
கெடா மாநில வளர்ச்சிக்காக கூட்டரசு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அம்மாநில மந்திரி பெசார் சனுசி நூர் தொடர்ந்து விமர்சிப்பது ஏன் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், தாய்லாந்து துணைப் பிரதமர் Anutin Charnvirakul-லுடன் இணைந்து, புக்கிட் காயு ஹீத்தாம் எல்லைச் சாவடியையும் தாய்லாந்தின் Sadao எல்லைச் சாவடியையும் இணைக்கும் புதிய சாலையைத் திறந்து வைத்ததாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சாலைத் திட்டம் பெர்லிஸ், கெடா மற்றும் தெற்கு தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்றும், கூட்டரசு அரசாங்கம் கெடாவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், கூட்டரசு அரசாங்கம் எந்த மாநிலத்தையும் அரசியல் அடிப்படையில் பாகுபடுத்துவதில்லை என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், வளர்ச்சித் திட்டங்களின் பலன் அனைத்து மாநில மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே கூட்டரசு அரசாங்கத்தின் கொள்கை என்றும் அன்வார் விளக்கமளித்துள்ளார்.








