ஜோகூர் பாரு, ஜூலை.11-
ஜோகூர் பாருவில் உள்ள வாக்களிப்பு மையம் ஒன்றில், தன்னால் படிக்கட்டில் ஏற இயலாது என்று தெரிவித்த பெண்ணுக்கு, தரைத்தளத்திலேயே வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோகூர் பாருவில் உள்ள Sekolah Rendah Agama Bersepadu பள்ளியில், வாக்காளர் பட்டியலில் அவரது விவரங்களை உறுதிப்படுத்திய தேர்தல் பணியாளர்கள், வாக்குச்சீட்டு மற்றும் நிரந்தர மையை தரைத்தளத்திற்கே கொண்டு வந்தனர்.
அவரது விரலில் நிரந்தர மையைப் பூசிய பின்னர், அவர் ரகசியமாக வாக்களிக்க வசதியாக தேர்தல் பணியாளர்கள் அங்கிருந்து விலகி நின்று, வாக்குரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
அப்பெண் தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர், வாக்குச்சீட்டை உறையில் வைத்து மூடியதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் அதை வாக்குப் பெட்டியில் செலுத்தினர்.
சுமார் 10 நிமிடங்களுக்குள் நிறைவடைந்த இந்த சிறப்பு வாக்குப்பதிவு, விதிமுறைகளின் படியும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்றதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.








