தீவிரவாதம் கொண்டவர்களை நாட்டை ஒப்படைத்து விடாதீர் என்று அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு, மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தீவிரவாதத் தன்மையை கொண்டவர்கள் நாட்டிற்கு தலைமையேற்கும் நிலை ஏற்பட்டால் மலேசியாவில் இதுநாள் வரையில் கட்டிக்காக்கப்பட்டு வரும் இனம் மற்றும் மதம் நல்லிணக்கம் சீர்குலையலாம் என்று விவசாயத்துறை அமைச்சருமான முகமட் சாபு எச்சரித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களை தேர்வு செய்வது மூலமே சரியான சமிக்ஞையை தீவிரவாதத்தன்மையை கொண்டவர்களுக்கு உணர்த்த முடியும் என்று முகமட் சாபு வலியுறுத்தினார்.
நேற்று இரவு மூவார், தாமான் சகே பாரு, விஸ்மா மூவார் மண்டபத்தில் உரையாற்றுகையில் முகமட் சாபு இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.








