இணைய மற்றும் தொலைபேசி வழி மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள், உடனடியாக 997 என்ற எண்ணில் தேசிய மோசடி தடுப்பு மையத்தை தொடர்புகொள்ளுமாறு தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் தனியாகப் போலீஸ் புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், 997-க்கு அழைப்பதே உதவி பெறவும், திருடப்பட்ட நிதியை மீட்டெடுக்கவும் போதுமானது என்றும் தெரிவித்தார்.
NSRC என்ற அந்த மையத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள போலீஸ் அதிகாரிகள், வணிக வங்கிக் குழுக்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனப் பிரதிநிதிகள் உடனடியாகப் புகார்களைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் கூறினார்.
நேற்று இந்த மையத்திற்கு வருகை தந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் இருந்து பல அடுக்கு போலி வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுவதைக் கண்காணிக்கும் முறைகளை ஆய்வு செய்ததாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
"பணத்தை மீட்டெடுக்க விரைவான நடவடிக்கை மிக அவசியம். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.








