பெட்டாலிங் ஜெயா, ஜூன்.21-
பல முக்கிய விவகாரங்கள் தீர்வு காணப்பட வேண்டியிருந்த போதிலும், பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தை ஏன் முன்னதாக நடத்தப்படவில்லை என்று பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் ஃபைஸால் அஸிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட உடனேயே, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றமும் கலைக்கப்பட வாய்ப்பிருந்த சூழலில், அப்போதே உச்ச மன்றக் கூட்டம் கூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே, தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் நடத்தப்படுவது சரியான நடைமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பிறகு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் கூட்டணியின் நடவடிக்கைகள் ஒழுங்காக முன்னெடுக்கப்படும் என்றும் துன் ஃபைஸால் தெரிவித்துள்ளார்.








