கோலாலம்பூர், ஜூன்.14-
வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பிகேஆர் கட்சியானது குறைந்தது 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஸியா சாலே இன்று அறிவித்துள்ளார்.
இரு மாநிலத் தேர்தல்களுக்கான தொகுதி ஒதுக்கீடுகளும் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பந்தாய் செலாமாட் பேரங்காடி கிளை திறப்பு விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதேவேளையில், பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த ஜசெக கட்சியானது ஜோகூரில் 17 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் என உறுதிப்படுத்தியிருந்தது.
மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலைப் பொறுத்தவரை, பக்காத்தான் கூட்டணியானது அனைத்து 36 தொகுதிகளிலும் களமிறங்கவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதன் அடிப்படையில், தொகுதி பங்கீட்டின் படி, பிகேஆர் 16 தொகுதிகளிலும், ஜசெக 11 தொகுதிகளிலும், அமானா 9 தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இரு மாநிலங்களிலும் பக்காத்தான் கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளது உறுதியாகியுள்ளது.








