இந்தியாவில், நீண்டகாலமாக பதவி வகித்து வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அன்வார், மோடியின் இந்த சாதனையானது பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பொதுச் சேவை மற்றும் இந்தியாவின் வளர்ச்சி, வளமை மற்றும் உலக அரங்கில் அதன் நிலையை உயர்த்திய தலைமையின் பிரதிபலிப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்திய பிரதமராக பதவி வகித்து வரும் மோடி, நேற்று ஜூன் 9 -ஆம் தேதி, பிரதமராக 4,398 நாட்களை நிறைவு செய்து, இதற்கு முன் இச்சாதனையை தன்வசம் வைத்திருந்த பண்டித ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதனிடையே, இந்தியாவுடனான மலேசியாவின் நீண்டகால நட்புறவை மதிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, மக்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பிரதமர் மோடிக்கு தொடர்ந்து வெற்றியும், இந்திய மக்களுக்கு அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமையும் கிடைக்க வாழ்த்துவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.








