வரும் ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேண 4,788 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் களமிறக்கப்படவுள்ளதாக மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து விரிவான பாதுகாப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்கூட்டியே வாக்களிக்கும் முறைக்காக 1,796 போலீசார் பிரத்யேகமாகப் பணியமர்த்தப்படுவர் என்றார்.
தொடர்ந்து பேசிய டத்தோ அல்சாஃப்னி அகமது, மாநிலத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 26 பகுதிகள் ‘ பதற்றம் நிறைந்த பகுதிகள்’ என அடையாளம் காணப்பட்டு, அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரசியல் கட்சி ஆதரவாளர்கள் வதந்திகளையோ, ஆத்திரமூட்டும் செயல்களையோ தவிர்க்க வேண்டும் என்றும், ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக 999 அவசரத் தொலைபேசி எண் அல்லது போலீஸ் கட்டுப்பாட்டு மையமான 06-7619999 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் டத்தோ அல்சாஃப்னி அகமது கேட்டுக்கொண்டுள்ளார்.








