நெகிரி செம்பிலான் அரச பரிபாலனத்தை அரசியலுடன் தொடர்புபடுத்தி, அதன் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது போலீசார் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலப் பக்காத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் வலியுறுத்தியுள்ளார்.
நெகிரி செம்பிலான் அரண்மனைக்கும் ஜசெ.க.விற்கும் தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளைக் கண்டித்த டத்தோ அமினுடின், அனைத்து இன மக்களும் மதிக்கும் ஓர் உன்னத அமைப்பைத் தேர்தலுக்காகத் தரம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது என்றார்.
முன்னதாக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களில் மதம், இனம் மற்றும் அரச குடும்பம் சார்ந்த '3அர்' விவகாரங்களை சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும், அரண்மனை எப்போதும் எவ்வித அரசியல் சார்புமின்றி நடுநிலையானது என்றும் நெகிரி செம்பிலான் அரண்மனை நிர்வாகம் மிக அழுத்தமாக நினைவூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.








