நெகிரி செம்பிலான் மாநில அரச பரிபாலன மற்றும் அரண்மனை விவகாரத்தில் ஜசெக எப்போதுமே தலையிட்டது இல்லை என்றும், மாநிலத்தின் ஆட்சிக்குரிய சட்டங்களை மதித்து நடப்பதாகவும் அந்த கட்சியின் மாநில தகவல் பிரிவுச் செயலாளர் லிம் சுன் வெங் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
செரம்பான் மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் காலங்களில் எல்லாம் ஜசெக கட்சியை இலக்காக வைத்து அவதூறு பரப்பும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வருத்தமளிப்பதாகக் கூறினார். குறிப்பாக, மலாய் வாக்காளர்களை அச்சமூட்டும் வகையில் அம்னோ தலைவர்கள் இனவாதக் கருத்துகளைத் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என லிம் சுன் வெங் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நிர்வாக சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அடிப்படை ஆதாரமற்ற பொய்களைப் பரப்பி பொதுமக்களைக் குழப்பக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.








