ஜோகூர் பாரு, ஜூன்.21-
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஜோகூர் மாநிலத் தேர்தல் வேட்பாளர்கள் நாளை புக்கிட் காம்பீரில் அறிவிக்கப்படவுள்ளனர்.
இது தொடர்பாக அன்வார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வேட்பாளர்களை, கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து நாளை இரவு 8 மணிக்கு புக்கிட் கம்பீர் எக்ஸ்ட்ரீம் பூங்காவில் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோகூரில் நேர்மையும், திறமையும், கடின உழைப்பும் கொண்ட தலைமைத்துவம் தேவைப்படுவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மாநில வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், மக்களின் நலனையும் பாதுகாக்கும் நம்பகமான வேட்பாளர்களை பக்காத்தான் கூட்டணி களமிறக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளையில், வெற்றியை நோக்கிய தீவிர பிரச்சாரம் இனி தொடங்கப்பட வேண்டும் என்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் அன்வார் உத்தரவிட்டுள்ளார்.








