கூச்சிங், ஜூன்.28-
சரவாக் மாநில சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகளைச் சேர்க்கும் முன்மொழிவானது, அடுத்த மாநிலத் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தொகுதி மறுவரையறை தொடர்பான பல்வேறு நடைமுறைகள் நிறைவடைந்த பிறகே இந்த முன்மொழிவு அமைச்சரவையில் தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூச்சிங்கில் உள்ள Sekolah Menengah Sains Kuching Utara பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முன்மொழிவு அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், புதிய தொகுதி வரையறை வரைபடத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுதல், அதனைத் தொடர்ந்து எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளைப் பெறுவதற்கான கால அவகாசம் வழங்குதல் உள்ளிட்ட கட்டாய நடைமுறைகள் இடம் பெறுகின்றன.
இதற்கிடையில், தொகுதி மறுவரையறை மற்றும் மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்களுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








