ஜோகூர் பாரு, ஜூன்.28-
ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, N27 லாயாங்-லாயாங் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணன், தனது இரண்டாம் நாள் தேர்தல் பிரச்சாரத்தை வீடு வீடாகச் சென்று மிகவும் தீவிரமாக முன்னெடுத்துள்ளார். மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ள அவர், வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
பிரச்சாரத்தின் இடையே நமது திசைகளுக்குப் பேட்டியளித்த குணா பாலகிருஷ்ணன், தொகுதி மக்களிடம் இருந்து தங்களுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார். இதுவரை தாங்கள் சென்ற அனைத்து வீடுகளிலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் தங்களின் ஏகோபித்த மற்றும் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் குறைகள் அனைத்திற்கும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நிச்சயம் முறையான தீர்வுகளை வழங்கும் என்பதைத் தாங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிய வைத்துள்ளதாக அவர் கூறினார். மேலும், இத்தேர்தலில் லாயாங்-லாயாங் பகுதிக்குத் தேவையான மிகச் சிறந்த நல்ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரமும் பொதுமக்களிடமே உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.








