ஜோகூர் பாரு, ஜூன்.28-
ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் ஸ்கூடாய் தொகுதிக்கு போட்டியிடும் கார்த்தியாயினி ஜெயபாலன், நாட்டின் இளையோர்களுக்கு சிறந்து முன்மாதிரி என்று தொடர்புத்துறை துணை அமைச்சரும், ஜசெக ஜோகூர் மாநிலத் தலைவருமான தியோ நீ சிங் புகழாரம் சூட்டினார்.

ஸ்கூடாய் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடும் கார்த்தியாயினி, ஒரு சாதாரண B40 குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதைச் சுட்டிக் காட்டிய தியோ நி சிங், இவரின் தந்தை ஒரு எளிய டாக்சி ஓட்டுநராக இருந்த போதிலும், கார்த்தியாயினி தனது கடுமையான உழைப்பால் தமிழ்ப்பள்ளியிலும், தொடர்ந்து தேசியப் பள்ளியிலும் படித்து, பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்று இன்று ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக உயர்ந்துள்ளார் என்று பாராட்டினார்.
வறுமையைக் கடந்து கல்வியின் மூலம் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள கார்த்தியாயினி, நாட்டின் அனைத்து இளம் பிள்ளைகளுக்கும், குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கும் ஒரு மிகப் பெரிய உத்வேகமாகவும், சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்கிறார் என்றும் தியோ நீ சிங் புகழாரம் சூட்டினார்.
"பொதுவாக வழக்கறிஞர்கள் குளிர்சாதன வசதி கொண்ட ஆடம்பர அலுவலகங்களில் அமர்ந்து நல்ல வருமானம் ஈட்ட முடியும். ஆனால், கார்த்தியாயினியின் இதயம் எந்நேரமும் சமூகத்திற்காகவே துடிக்கிறது. இதனால் அவர் வழக்கறிஞர் தொழிலோடு நில்லாமல், அடிமட்டத் தொண்டராகப் பல்வேறு சமூக நலப் பணிகளிலும், மக்கள் சேவைகளிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஸ்கூடாய் தொகுதியிலேயே பிறந்து, வளர்ந்து, அங்கேயே வசித்து வரும் கார்த்தியாயினி, இத்தொகுதிக்கு மிகச் சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான மக்கள் பிரதிநிதியாகத் திகழ்வார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்று தியோ குறிப்பிட்டார்.
எனவே, ஸ்கூடாய் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கி, தங்களின் முழுமையான பேராதரவை வழங்க வேண்டும் என்று தியோ நீ சிங் உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.








