கோலாலம்பூர், ஜனவரி.14-
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே, இன்று நடைபெறும் கட்சியின் பொதுப்பேரவையில், தனது முடிவு குறித்த ஓர் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அக்மால் சாலேவைத் தாம் நேரில் சந்தித்ததாகவும், அவருக்குச் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், இன்று அம்னோ பொதுப்பேரவையில் அந்த முக்கிய அறிவிப்பை அக்மால் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும் என்ற தனது கருத்துக்கு, கட்சித் தலைவரிடமிருந்து எதிர்மறையான கருத்துகள் கிடைத்ததைத் தொடர்ந்து, தாம் பதவி விலகும் நேரம் வந்துவிட்டதாக அக்மால் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது தான் வகிக்கும் பதவிகள் குறித்து அம்னோ தலைவர் மற்றும் மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ ஆகிய இருவரும் எடுக்கும் முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அக்மால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








