தமக்கு எதிராக, தனது முன்னாள் ஆய்வு உதவியாளர் முகமது யுசோஃப் ரௌத்தர் தாக்கல் செய்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்குடன் தொடர்புடைய எட்டு சட்ட கேள்விகளை, கூட்டரசு நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திரும்பப் பெற்றுள்ளார்.
இதனையடுத்து, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி, மாலை 5 மணிக்குள், வழக்குச் செலவுத் தொகையான 50 ஆயிரம் ரிங்கிட்டை, முகமது யுசோஃப்க்கு அன்வார் செலுத்த வேண்டுமென, மூன்று பேர் அடங்கிய அப்பீல் நீதிமன்ற தலைமை நீதிபதி வோங் கியான் கியோங் உத்தரவிட்டுள்ளார்.
தம்மை எதிர்த்து வழக்கு தொடர முடியாத படி, இம்யூனிட்டி தொடர்பான எட்டு சட்டக் கேள்விகளை, அன்வார் கூட்டரசு நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க விரும்பினார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்ததாக, அன்வாரின் முன்னாள் ஆய்வு உதவியாளரான முகமது யுசோஃப் தொடர்ந்த வழக்கு தொடர்பில், அன்வார் சார்பில் அம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.








