பினாங்கு, புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள கோயில் ம் தொடர்பாக, வரும் மார்ச் 7-ஆம் தேதி ‘ஒப்ஸ் தெர்ஜா’ (Ops Terjah) எனும் பெயரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சமூக ஊடகப் பதிவுகள் குறித்து தமது கவனத்திற்கு வந்துள்ளதாக மனிதவள அமைச்சரும் புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், எந்தவொரு தரப்பும் மத மற்றும் இன ரீதியான உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ காட்டிக்கொள்ள முயலத் தேவையில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இத்தகைய தூண்டுதல் மற்றும் போராட்டங்கள் நாட்டின் சிக்கல்களைத் தீர்க்க உதவாது என்பதுடன், இது வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டைச் சீரழிக்கும் செயலாகும் என்றும் அவர் சாடினார்.
தாம் அனைத்து இன மற்றும் மத மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் என அனைத்து மலேசியர்களின் நலன்களையும் தாம் பாதுகாப்பேன் என்றும் ஸ்டீவன் சிம் உறுதியளித்தார்.
எந்தவொரு குடிமகனும் அச்சுறுத்தப்படுவதையோ அல்லது மிரட்டப்படுவதையோ தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தை உடனடியாக ரத்து செய்து, வன்முறையைத் தூண்டும் செயல்களை நிறுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்தவொரு தரப்பும் தூண்டுதல் போராட்டங்களை நடத்துவதை அனுமதிக்க வேண்டாம் என அவர் அரச மலேசிய போலீஸ் படையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.








