மலாக்கா, ஜனவரி.13-
தான் வகித்து வரும் பதவிகள் குறித்து அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியும் மலாக்கா மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யுசோவும் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் தான் கட்டுப்பட இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தெரிவித்துள்ளார்.
மலாக்காவிலுள்ள மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட தன்னைத் தேர்தலில் நிறுத்தியதும், கிராமப்புற மேம்பாடு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகத் தன்னைத் தேர்ந்தெடுத்ததும் அவர்கள் இருவர் தான் என்பதால், அவர்களிடமே அந்த முடிவுகளை விட்டு விடுவதாக அக்மால் குறிப்பிட்டுள்ளார்.
தான் எந்த ஓர் அறிவிப்பையும் வெளியிடுவதாக இருந்தாலும், அவர்கள் இருவரின் ஒப்புதலைக் கேட்க வேண்டும் என்றும் அக்மால் தனது முகநூல் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், தனது பதவிகளிலிருந்து விலகும் நேரம் வந்து விட்டதாக அக்மால் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்ததையடுத்து, அவர் பதவி விலகப் போவதாக அம்னோ வட்டாரங்களில் பேச்சு வார்த்தைகள் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.








