கோலாலம்பூர், மே.11-
மலேசியா மடானி குரலை முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்நாட்டு தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முன் வந்துள்ளார். பிகேஆர் அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய ஒரு கட்சியாகும். மேலும் அதிகாரப் பகிர்வில் அனைத்து இனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரமணன் கூறினார்.
அனைத்து தரப்பு மக்களின் குரலாக பிகேஆர் கட்சியை வலுப்படுத்தத் தாம் கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையின் கீழ், மலேசியா மடானி கொள்கைகளுக்கு ஏற்ப, பிகேஆர் கட்சியை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.